வேலைவாய்ப்பற்ற வட – கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள்!

வேலைவாய்ப்பற்ற வட – கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள்!

வேலைவாய்ப்பற்ற வட – கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி. சில்வா தெரிவித்துள்ளார்.

விமான போக்குவரத்து கல்லூரியினை அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஆர்.பிரேமல் டி. சில்வா மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்று பின் மேற்படிப்புக்கு செல்லமுடியாத நிலையில் தொழில்வாய்ப்பாக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர், யுவதிகளுக்காக விமானபோக்குவரத்து கல்லூரியினை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் முதற்தடவையாக தமிழ் இளைஞர்களுக்கான இந்த கல்லூரியினை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை தார்மீக பொறுப்பு வாய்ந்தாக காணப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண சர்வதேச விமானபோக்குவரத்து நிலையம் காணப்படுகின்றது. அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டநிலை காணப்படுகின்றன.

அவற்றிக்கான சேவை துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு அதனுடாக தமிழ்மொழி தெரிந்தவர்களும் தொழில்வாய்ப்புக்காக இணைக்கப்படவுள்ளனர்.

இந்த கல்லூரியின் கட்டிட நிர்மாணப்பணிகள் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும்.

எனவே தமிழ் தெரிந்த மாணவர்களை உள்ளீர்க்க இந்த அரிய சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்து இருக்கின்றோம்” என இலங்கை விமானப் போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் வட.மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மற்றும் இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் உயர்அதிகாரிகள், மற்றும் தொழில்துறைசார்ந்த கல்லூரியின் விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.