மனைவி, பிள்ளைகளை அரவணைத்து அழுத உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரி..!

மனைவி, பிள்ளைகளை அரவணைத்து அழுத உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரி..!

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீம் தமது பேஸ்புக் ஊடாக வெளியிட்டிருந்த சில காணொளிகள் தொடர்பில் தகவல்களை ஆராய்ந்து அப்போதைய காவல்துறைமா அதிபரிடம் 14 முறை விசாரணை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக அது தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவரின் சாட்சியத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் ஊடாக தகவல் வழங்கப்பட்டதா என சாட்சியாளரிடம், ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு வினவியுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள அவர், அராங்க புலனாய்வு சேவை ஊடாக காவல்துறைமா அதிபருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய அவர் தமது பிரிவிற்கு அது தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சஹ்ரான் ஹாசீமினால் 2017 முதல் 2018 வரையான காலப்பகுதியில் தமது பேஸ்புக் ஊடாக வெளியிட்டுள்ள சில காணொளிகள் தொடர்பில் அறிந்து கொண்டதன் பின்னர் அது சம்பந்தமான தகவல்களை ஆராய்ந்து காவல்துறைமா அதிபருக்கு 14 தடவைகள் விசாரணை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறைமா அதிபர் மேலதிக அறிக்கைகைகளை மாத்திரமே கோரினாரா? அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கவில்லையா என இதன்போது ஆணைக்குழு, சாட்சியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறைமா அதிபர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மேலதிக விசாரணை அறிக்கைகளையே கோரியதாக சாட்சியாளர் இதன்போது பதில் அளித்துள்ளார்.

சஹ்ரான் ஹாசீமினால் வெளியிடப்பட்டுள்ள காணொளிகளில் சாதாரண முஸ்லிம் இளைஞர் சமுதாயத்தை அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு தூண்டும் வகையில் இருந்ததால் அவரை கைது செய்வதற்காக திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக சாட்சியம் வழங்கிய பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சஹ்ரான் ஹாசீமை கைது செய்வதற்காக பல முறை முயற்சி செய்த போதும் சந்தேகத்திற்குரியவர் இருந்த இடத்தை கண்டறிய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். திறந்த பிடியாணை தொடர்பில் நாட்டில் உள்ள அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததா? என ஆணைக்குழு இதன்போது சாட்சியளரிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், அது அவ்வாறு அறிவிக்க வேண்டிய போதிலும் அதுபோன்ற நடவடிக்கைகள் இடம்பெறவில்லை எனவும் அது தவறவிடப்பட்டுள்ளதாக தாம் கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சஹ்ரான் ஹாசீம் தலைமை வகித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டிருந்ததா என ஆணைக்குழு எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், அந்த அமைப்புக்கு அன்றி தனிப்பட்ட ரீதியில் சஹ்ரான் ஹாசீமிற்கு அரசியல்வாதி ஒருவர் அடைக்கலம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் அப்போது உறுப்பினராக இருந்த சிப்லி பாரூக் என்பவரே ஏப்ரல் 21 தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமிற்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிரேஸ்ட அதிகாரி, ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சி வழங்கியுள்ளார். இதேவேளை தற்கொலை தாக்குதல்தாரி இல்ஹாமின் மைத்துனர் ஒருவர் நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கினார்.

இல்ஹாம், தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு 7 மணி நேரத்துக்கு முன்னர், தெமட்டகொடயில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தமது பிள்ளையை கட்டியணைத்து அழுததாக அவரது மனைவியான தமது தங்கை தம்மிடம் தெரிவித்ததாக சாட்சியளித்துள்ளார்.