யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் டக்ளஸ் கவனம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் டக்ளஸ் கவனம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் சென்ற யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்து வைத்தியசாலையின் ஆளணி ,பௌதிக வள பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலை தற்போது பல வைத்திய சேவை பிரிவுகள் விரிவாக்கம் கண்டுவரும் நிலையில் அதற்கான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஊழியர்களின் பற்றாக்கறை அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியதுடன் அதற்கான தீர்வு அவசியமானது என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் குறித்த வைத்தியசாலையானது தற்போது வடபகுதியில் பாரியளவிலான சேவையை முன்னெடுத்து வருகின்றபோதிலும் குறைந்தளவான வசதிகளுடனேயே காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தின் வைத்திய சேவையின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காக அதனை வளப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பிரிவுகளை யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் விவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கான  வசதி வாய்ப்புக்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

வைத்தியர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் போதனா வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சருடன் தாம் சந்திப்பொன்றை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததுடன் அதனூடாக வைத்தியசாலையின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வைத்தியர் பிரதிநிதிகளிடம் உறுதி அளித்தார்.