
வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் உயிரிழந்ததால் ஏற்பட்ட குழப்பம்! தற்போது வெளியாகியுள்ள உண்மை
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்திய நிலையில், வவுனியா வைத்தியசாலையில் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உயிரிழந்தவரின் மனைவியிடம் வாக்குமூலத்தினை பதிவுசெய்திருந்தார். அவரது வாக்குமூலத்தில் தவறான தடுப்பூசியினை செலுத்தியமையாலேயே தனது கணவர் உயிரிழந்ததாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது வாக்குமூலத்தினை பதிவுசெய்திருந்தார்.
இதனையடுத்து சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உத்தரவிட்டிருந்தார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையின் பிரகாரம் குறித்த குடும்பஸ்தரது மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா மகாறம்பைக்குளம் புளியடிப் பகுதியை சேர்ந்த குறித்த குடும்பஸ்தருக்கு கடந்த இரண்டு நாட்களிற்கு முன்னர் நாய் கடித்துள்ளது. இந்நிலையில் அதற்கான தடுப்பூசியை போடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் அவர் சென்றுள்ளார்.
அவருக்கு நாய்கடித்ததற்கான தடுப்பூசி நேற்று காலை போடப்பட்டது. அதன் பின்னர் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற நிலையில் அவருக்கு சுகயீனம் ஏற்பட்டது.
இதனால் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் புளியடி பகுதியை சேர்ந்த சிவபாலன் வயது 49 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.