யாழில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

யாழில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார்.

வளிமண்டல கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மாதங்களுக்கு தொடரலாம் என வளிமண்டல திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.

யாழில் கடந்த இரண்டு நாட்கள் மட்டும் 90.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றுக் காலை 8.30 மணியிலிருந்து இன்று 8.30 மணி வரை 55.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 2.30 மணி வரையில் 22.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதில், அச்சுவேலிப் பகுதியில் 92.9மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேபோல் தெல்லிப்பழை பிரதேசத்தில் 84.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த வருடம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 343.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்குப் பகுதியில் கடற் தொழிலில் ஈடுபடுவோர் மிக அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.