ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத் தண்டனையா?
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் நேற்று நிறைவு செய்தது.
இது சம்பந்தமான விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்வதற்காக தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளதால், தொடர்ந்தும் மேன்முறையீடு செய்ய வாய்ப்பில்லை எனவும் கூறியிருந்தார்.
இதனடிப்படையில் அவர் தண்டனை அனுப்பவிக்க வேண்டும் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய இரண்டு விடயங்கள் மாத்திரமே இருப்பதாக சட்டத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கும்.
எது எப்படி இருந்த போதிலும் உயர் நீதிமன்றம் வழங்க போகும் தீர்ப்பிலேயே அடுத்த என்ன நடக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.