மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிட்டது.

எனினும் ஆசனப் பங்கீட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது.

இந்த நிலையிலேயே, மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு செப்ரெம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் 9 மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இதற்கமைய, இடைக்கால கணக்கறிக்கையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.