இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை எடுத்துள்ள தீர்மானம்
4 சதவீதம் கொண்ட தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் இறுதித் திகதியினை நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்திருக்கிறது.
இதற்கமைய, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களும் தனிப்பட்டவர்களும் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் கீழான தமது கடன் விண்ணப்பங்களை தொடர்பான உரிமம்பெற்ற வங்கிகளுக்கு 2020 செப்டம்பர் 30 ஆம் நாள்வரை சமர்ப்பிக்கமுடியும்.
நாணயச் சபை கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மேற்குறிப்பிட்ட வசதியின் கீழ் 36,489 விண்ணப்பதாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட கடன்களுக்கு ரூ.100,017 மில்லியன் பெறுமதியான தொகைக்கு ஒப்புதலளித்ததன் மூலம் 2020 ஒகஸ்ட் 18 ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் கடன் தொகை ரூ.100 பில்லியன் கடன் தொகைகள் மைல்கல்லினைக் கடந்தது.
ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களில் 2020 ஒகஸ்ட் 18ஆம் நாள் உள்ளவாறு, நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 25,365 வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையே ரூ.68.5 பில்லியனுக்கும் கூடுதலான தொகையினை உரிமம்பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்திருக்கின்றன.