
இன்றையதினம் சப்பறத்துக்கு பதில் இடப வாகனத்தில் காட்சியளித்தார் நல்லூர் கந்தன்
கோவிட் -19 பரவலை முன்னிட்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணும்வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய 23ஆம் திருவிழாவான இன்று(16) மாலை நல்லூர் கந்தன் சப்பறத்தில் வீதியுலா வரவில்லை.
மாறாக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய இடப வாகனங்களில் வள்ளி, தெய்வாணை சமேதராய் நல்லூரான் வெளிவீதியுலா வந்து காட்சியளித்தார்.
இதேவேளை, நாளை காலை இரதோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அடியவர்களின் வசதி கருதி சண்முகப் பெருமானை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை தரிசிக்க முடியும் என்று ஆலய தர்மகர்த்தா அறிவித்துள்ளார்.