இரவு பத்து மணிவரை சேவை வழங்க வேண்டும் - வடக்கு ஆளுநர் உத்தரவு

இரவு பத்து மணிவரை சேவை வழங்க வேண்டும் - வடக்கு ஆளுநர் உத்தரவு

வடக்கில் உள்ள வர்த்த நிலையங்களை மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இரவு பத்து மணிவரை திறக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தின் நகரங்களிலுள்ள கடைகள் மாலை 6 அல்லது 7 மணிக்கு பூட்டப்பட்டு பொது மக்களின் நடமாற்றம் குறைந்து போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்த நிலைக்கு வருவதாக நான் அறிகின்றேன்.

தற்போது நாட்டில் இயல்புநிலை காணப்படுவதால் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.

எனவே வர்த்தக சங்கங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஆகியோருடன் நான் நடத்திய கலந்துரையாடலுக்கமைவாக வட மாகாணத்தின் நகரங்களிலுள்ள கடைகள் அனைத்தும் இரவு 10 மணிவரை முழுமையாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன்.

இனிவரும் நாட்களில் கடைகள் அனைத்தும் திறந்திருப்பதோடு பொது மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கக்கூடிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதை சகல உள்ளுராட்சி சபைகளும் நகர சபைகளும் முன்னெடுப்பதோடு இதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தித்தருமாறு அரச மற்றும் தனியார் போக்குவரத்து சபைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.