யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இவர்களில் ஒருவரா..? மூவரின் பெயர் பரிந்துரை

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இவர்களில் ஒருவரா..? மூவரின் பெயர் பரிந்துரை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்காக 6 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் 3 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணித புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மற்றும் மூன்றாவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே மாதம் 15 ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

அதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் ஒன்று உரிய முறைப்படி பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் நிராகரிப்பட்டதுடன், ஏனைய ஆறு விண்ணப்பங்களில் இருந்து மூன்று பேரை பரிந்துரைக்கக் மதிப்பீட்டுக் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.