மானிப்பாயில்நள்ளிரவுநேரம் வீட்டுக்குள் புகுந்து வாளை காட்டி அச்சுறுத்தி கொள்ளை -பெண் உட்பட எண்மர் கைது

மானிப்பாயில்நள்ளிரவுநேரம் வீட்டுக்குள் புகுந்து வாளை காட்டி அச்சுறுத்தி கொள்ளை -பெண் உட்பட எண்மர் கைது

மானிப்பாய் பகுதியில் நள்ளிரவு வேளையில் வாளை காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 16 பவுண் நகைகளை கொள்ளையடித்த குற்றத்தில் பெண் உட்பட எட்டு சந்தேக நபர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர்  கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் பகுதியில் கடந்த மாதம் 21ம் திகதி நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்தவர்களை வாளினைக் காட்டி அச்சுறுத்தி வீட்டில் இருந்த 16 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்தனர்.யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் நவாலி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை கைது செய்து விசாரணை செய்தபோது அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.மேலும் குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண் உட்பட 8 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் நகைகளில் 12 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தபட்டதாக கூறப்படும் வாள்,மோட்டார் சைக்கிள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்,சங்கானை,பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.