யாழில்.துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது!

யாழில்.துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது!

யாழ்.அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அராலி பகுதியில் உள்ள இளைஞர் குழு ஒன்றிடம் துப்பாக்கி மற்றும் வாள்கள் உள்ளன என வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர்கள் குழு வசிக்கும் பகுதியில் நேற்றைய தினம் தேடுதல் நடத்தினார்கள்.

அதன் போது உள்ளூர் தயாரிப்பு (கட்டுத்துவக்கு/ இடியன்) துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டது. அது தொடர்பில் இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இரு இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் எட்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்று அவர்களை விடுவித்துள்ளனர்.

அதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.