மத்திய கிழக்கு போர் நீடித்தால் இலங்கைக்கு கடும் பாதிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு தேவையையோ அல்லது விருப்பத்தையோ வெளிப்படுத்தவில்லை என்றும், இதன் காரணமாக ஆசிய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவினால் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டு தற்போது 36 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமைகள் குறித்துக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் ஆசிய நாடுகள் கடும் சவால்களை எதிர்கொள்ளும் என்றும், இதன் காரணமாக அந்த நாடுகளுக்குள்ளேயே எதிர்ப்புக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக ஆசிய நாடுகளுக்குள் உள்நாட்டு சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடையும் என்றும், அந்த வகையில் ஆசிய நாடான இலங்கையும் இந்தச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்தப் போர்ச் சூழலானது தற்போது ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்துள்ளதுடன், அது உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ஒரு நெருக்கடியாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலைமை மேலும் தீவிரமடைந்தால், அது ஒரு பொருளாதார வீழ்ச்சி வரை செல்லக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.