அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு : பிரதமர் அறிவிப்பு
இலங்கையின் அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழு ஊடாக அரச சேவையின் சம்பள முரண்பாடுகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று (06) உரையாற்றிய போது பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் குறித்து அதிபர் சங்கங்கள் மற்றும் அதிபர்களுடன் நாம் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். இந்த முரண்பாடு தொடர்பாகத் தொடர்ந்து ஆராய்ந்து ஒரு தீர்வைப் பெறுவதற்கு நாம் முயற்சித்து வருகிறோம்.

அரசாங்கத்தின் கொள்கையின்படி, இந்த ஆண்டு சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அதன் மூலமாகவே எம்மால் நிலையான தீர்வை வழங்க முடியும்.
கடந்த காலங்களில் சம்பள உயர்வுகள் வழங்கப்பட்ட விதம் காரணமாக, கல்வித் துறையில் மட்டுமன்றி பல துறைகளிலும் நெருக்கடிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.
இதற்கு நிலையான தீர்வு அவசியம் என்பதால், சம்பள ஆணைக்குழு ஊடாகத் தீர்வைத் தேட முயற்சிக்கிறோம். அதில் அதிபர்களின் பிரச்சினைகள் குறித்து விசேடமாகப் பரிந்துரைகளை முன்வைக்க நாம் எதிர்பார்க்கிறோம்“ என தெரிவித்தார்.