பிள்ளைகளின் கண் முன்னால் தாயார் கொலை; வட்டிப்பணத்தால் பறிபோன உயிர்
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (4) குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான 46 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேற்படி பெண்ணின் கணவர் கூலி வேலைக்குச் சென்ற நிலையில் அந்தப் பெண் வீட்டில் தனது பிள்ளைகளுடன் இருந்துள்ளார்.

மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு வந்த உறவினரான ஆண் ஒருவர், வட்டிப் பணம் தொடர்பில் அந்தப் பெண்ணுடன் முரண்பட்டுள்ளார்.
இறுதியில் அவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அயலவர்கள் பெண்ணை உடனே வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்துவிட்டதாக தெரியவருகின்றது.
கொலையாளியான 42 வயது நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னடுத்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரிடமும், பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.