ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு : பிரதமர் அறிவிப்பு
நாட்டில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டிற்கு 2026 மார்ச் மாதத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya)அறிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆளுநர்களிடம் இருந்தும் இதற்கான ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட சில பாடத்திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், மாணவர்களுக்கான பாதுகாப்பான இணையவழி வழிகாட்டல்களைத் தீர்மானிக்க 'டிஜிட்டல் செயலணி' ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்திலிருந்து குழந்தைகளை முழுமையாகப் பிரித்துவிட முடியாது என்பதால், அவர்களுக்குப் பொருத்தமான இணையச் செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கான வழிகாட்டல்கள் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்படும். மேலும் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் மற்றும் இணைப்புகளை (Links) மட்டுமே மாணவர்கள் அணுகும் வகையில் இது அமையும்.
அத்துடன் புதிய சீர்திருத்தங்களின் கீழ், சுயக்கற்றல் தொகுதிகள் (Self-study modules) ஊக்குவிக்கப்படும். இனி ஆண்டு இறுதிப் பரீட்சைகளுக்குப் பதிலாக, தொடர்ச்சியான மதிப்பீட்டு முறைகள் (ContinuousAssessments) நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் 200 மில்லியன் டொலர் நிதியுதவியைப் பெறுவதற்காகவே தரம் 6 பாடத்திட்டங்கள் அவசரமாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவ்வாறான எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை“ என தெரிவித்தார்.