யாழில் சம்பவம் - போதையில் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி
மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் ஓட்டுநர் ஒருவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (4) மாலை 4.30 மணியளவில் யாழ் - ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் வினவியபோது - இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் இடையிலான சேவையை முன்னெடுக்கும் வழித்தடம் 777 இலக்க பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியே குறித்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அரச பேருந்து அதி வேகத்தில் அதிகளவான பயணிகளுடன் செல்வதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான காவல்துறை அணியினர் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதிருந்துள்ளது.
அத்துடன் அவர் நிறை போதையில் இருந்ததை அவதானித்த காவல்துறையினர் அவரை மது போதையில் சாரதித்துவம் செய்தமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்து ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணைகளின் பின் குறித்த சாரதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.