கண்டி மாவட்டத்தில் மீண்டும் பாரிய மண்சரிவு
கண்டி மாவட்டத்தில் உடதும்பர மற்றும் ஹுன்னஸ்கிரிய ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஹுன்னஸ்கிரியவில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.
பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு இருவரை உடுதும்பர வைத்தியசாலையிலும் மற்றொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.
அப்பகுதிகளில் இன்னும் மண்சரிவு ஏற்பட கூடிய அபாயங்கள் காணப்படுவதால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் தற்காலிக தங்குமிட முகாமுக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளனர்.
குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக முகாமில் இருந்தவர்கள் அனைவரும் மற்றொரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

அதேநேரம் ஹுன்னஸ்கிரியவிலிருந்து மீமுரே வரையிலான பாதை பாதிக்கப்படக்கூடிய சூழ் நிலை காரணமாக வாகன ஓட்டுநர்கள் அவதானமாக இருக்கும் படி கேட்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு நேற்று கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கண்டி - மஹமாய பெண்கள் பாடசாலைக்கு மேல் உள்ள ராஜா பிஹில்ல மாவத்தையில் பல இடங்களில் கனமழையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு குறித்த பாடசாலை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.