வடக்கு - கிழக்கு தொடருந்து சேவைகள் ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு - கிழக்கு தொடருந்து சேவைகள் ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம்

பேரிடரால் சேதமடைந்த தொடருந்து பாதைகள் வெகுவாகப் புனரமைக்கப்படுகின்றன.

2026.01.01ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குக்கான தொடருந்து சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும். 2026 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 

அதேவேளை, மலையகத்துக்கான தொடருந்து சேவையை ஆரம்பிக்கும் பணிகளும் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் நேற்று(18) வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, "டித்வா சூறாவளி தாக்கத்தால் மத்திய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சும் பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு தொடருந்து சேவைகள் ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம் | Northern Eastern Railway To Resume From January

பிரதான மற்றும் சிறு வீதிகள், பாலங்கள், தொடருந்து வீதிகள், பாலங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள ஏ மற்றும் பி கட்டமைப்பிலான வீதிகள் சேதமடைந்துள்ளன.

அண்ணவளாக 1450 6.4 கிலோமீற்றர் தூர வீதிகள் சேதமடைந்துள்ளன. மத்திய மாகாணத்தில் பெருமளவிலான வீதிகள் சேதமடைந்துள்ளன.

மலைகளுக்கு நடுவில் வீதிகளை அமைத்ததன் விளைவையே நாடு இன்று எதிர்கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தியின் போது எதிர்க்கால திட்டமிடல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும். சேதமடைந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 69 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளி தாக்கத்தால் தொடருந்து திணைக்களம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

தொடருந்து பாதைகள், பாலங்கள், சமிஞ்சை கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மலையக தொடருந்து பாதையில் தொடருந்து வீதியின் இருப்புகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன.

வடக்கு - கிழக்கு தொடருந்து சேவைகள் ஜனவரி முதல் மீண்டும் ஆரம்பம் | Northern Eastern Railway To Resume From January

தொடருந்து பாலங்களைப் புனரமைப்பதற்கு மாத்திரம் 6 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த தொடருந்து பாதைகளை விரைவாகப் புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

வடக்கு மற்றும் கிழக்குக்கான தொடருந்து சேவைகள் 2026.01.01 ஆம் திகதி முதலும், தலைமன்னாருக்கான தொடருந்து சேவைகள் 2026 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்தும் முழுமையாக ஆரம்பிக்கப்படும்.

மலையகத்துக்கான தொடருந்து சேவையை ஆரம்பிக்கும் பணிகள் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு மற்றும் இழப்பீடு வழங்கப்படுகின்றது. இந்த நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதனை விடுத்து அரசியல் இலாபம் தேடக்கூடாது." என்றும் குறிப்பிட்டுள்ளார்.