அஸ்வெசும கொடுப்பனவை இழந்த ஆயிரக்கணக்கான பயனாளிகள்
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டில் சலுகைகள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான சலுகைகள் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதனால், தகுதியுடைய பயனாளிகளுக்குக் குறித்த சலுகைகள் கிடைக்காமல் போக அல்லது இழக்க நேரிடும் என்று கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குறைபாட்டைத் தீர்ப்பதற்காக, நலன்புரி நன்மைகள் சபை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலும் பொருத்தமான ஒரு பொறிமுறையை நிறுவி செயற்படுத்தவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கணக்காய்வு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளுக்கு கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும' திட்ட விதிகளுக்கு அமைய, தகுதியுடைய நபர்களுக்குப் பலன்களை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கணக்காய்வு பரிந்துரை செய்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை தொடர்பான 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.