பெற்றோரை பராமரிக்கும் சில பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்...! அரசு நடவடிக்கை
திருமணம் செய்யாமல் பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேனா நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் சந்தன அபயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காக பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு சிறப்பு விடயம் எனவும், இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஓய்வூதியம் பெறுபவரின் மரணத்திற்கு பின்னர் வாழ்க்கைத் துணைவருக்கும், வாழ்க்கைத் துணையின் மரணத்திற்குப் பிறகு 26 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தற்போது ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.