சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகப் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் 36 சிறைச்சாலைகள் உள்ளன. அவற்றில் அடைக்கக்கூடிய சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 10500 ஆகும்.
ஆனால் தற்போது கிட்டத்தட்ட 36000 பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக சிறைச்சாலைகளில் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் தற்போதைக்கு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் அதிகளவானோர் இளைஞர்கள் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.