என்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா

என்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா

தன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில்  தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக சதி இடம்பெற்றுள்ளதாகவும் கருத்து மோதல்கள் இடம்பெறுவதுடன் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே சசிகலா ரவிராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கட்சியின் தலைமைகளுடன்  இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

எனவே, இவ்விடயத்தில் அவர்கள்தான் தீர்மானம் எடுக்க வேண்டும். அத்துடன் ஆதரவாளர்களின் எண்ணங்களில்தான் எனது வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டது.

இவ்வாறு, ஆதரவாளர்களும் என்மீது முழுமையான நம்பிக்கையில் இருந்தபோதும் பெறுபேறுகள் முடிவுகளில் பின்தள்ளப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முடிவை நான் ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அத்துடன், மத்திய கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில், பாதுகாப்பு படையினர் இறக்கப்பட்டமை குறித்தே சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேன். மாறாக வெளியான பெறுபேறு குறித்து அவரை நான் குறிப்பிடவில்லை. மேலும், எனக்கு  எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.