நாட்டின் பல பகுதிகளில் 1.00 மணிக்கு பின் கனமழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், கொழும்பில் நேற்று (16) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவசர பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான காற்று, இடி மற்றும் மின்னலுடனான மழை பெய்யக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.