
இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு வெளியான அறிவிப்பு
இலங்கைக்கான (Sri Lanka) பயண ஆலோசனையை அமெரிக்கா (United States) புதுப்பித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை (U.S. Department of State) அறிவுருத்தல் வழங்கியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை நிலை இரண்டின் கீழ் இந்த ஆலோசணை புதிப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதிய ஆலோசனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் காணப்படும் அமைதியின்மை, பயங்கரவாத அபாயங்கள் மற்றும் கண்ணிவெடி ஆபத்துக்கள் குறித்த பல எச்சரிக்கை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால் எதிர்பாராத முறையில் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்றும், அவை திடீரென வன்முறையாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பயங்கரவாத தாக்குதல்கள் எச்சரிக்கையின்றி நிகழக்கூடும் எனவும், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், விடுதிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்கள் இலக்காக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் சுமார் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடி அபாயம் நிலவுகின்றது என்பதால், அந்த பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் பாதைகளில் இருந்து விலகாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியினருக்கு தமது பயணத் திட்டங்களை மாற்றத் தயாராக இருக்கவும், அரசாங்க அறிவிப்புகளை பின்பற்றவும், Smart Traveler Enrollment Program (STEP) என்ற சேவையில் பதிவு செய்து அவசர எச்சரிக்கைகளைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கையில் உள்ள தூர பிரதேசங்களில் அவசரநிலைகளில் உதவி வழங்கும் திறன் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை, இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல் ஸ்திரமின்மையையும் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.