
யாழில் நீரில் மூழ்கி 17 வயது இளைஞன் உயிரிழப்பு
யாழில் (Jaffna) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை - சாவல்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவரத்தினம் சந்தோஷ் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கடற்றொழிலுக்காக சித்தப்பாவுடன் காக்கைதீவு கடற்பகுதியூடாக மண்டைதீவு கடலுக்கு சென்றுள்ளார்.
களங்கண்டி முறையிலான மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குறித்த இளைஞனை காணாததால் அவரது சித்தப்பா கடலில் தேடுதலில் ஈடுபட்டவேளை குறித்த இளைஞன் களங்கண்டி தடியை பிடித்துக்கொண்டு மயக்க நிலையில் இருந்ததை அவதானித்தார்.
பின்னர் குறித்த இளைஞனை படகில் ஏற்றிக்கொண்டு குருநகர் இறங்குதுறைக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிறிது நேரத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை மானிப்பாய் காவல்துறையினர் நெறிப்படுத்தினர். நீரில் மூழ்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.