
யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி - கலாசாலை வீதி பகுதியை சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிக்கினார்.
இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.