தம்புள்ளையில் செயல்படாத களஞ்சியசாலைக்கு மில்லியன் கணக்கில் மின்சார கட்டணம்
செயல்படாத தம்புள்ளை (Dambulla) விவசாய குளிர்பதனக் களஞ்சியசாலைக்கு ரூபாய் 8.4 மில்லியன் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தம்புள்ளை விவசாய குளிர்பதனக் களஞ்சியசாலை செயல்படாத போதிலும் ரூபாய் 8.4 மில்லியன் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.
உதய கம்மன்பில தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் குறித்த களஞ்சியசாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, மின்சாரம் செலுத்தாததால் அதற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவால் முன்மொழியப்பட்ட திட்டத்துக்கமைய இந்திய உதவியுடன் கட்டப்பட்ட இந்த விவசாய குளிர்பதன் களஞ்சியசாலை, ஏப்ரல் ஐந்தாம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதிலிருந்து பயன்படுத்தப்படாமலுள்ளது.

இதற்காக அரசாங்கத்தை விமர்சித்த உதய கம்மன்பில, சர்வதேச பங்காளிகளை தவறாக வழிநடத்துவது இராஜதந்திர உறவுகளை சேதப்படுத்தும் என்று எச்சரித்துடன் இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.