
மக்களே அவதானம்...! தேங்காய் எண்ணெயில் நடக்கும் பாரிய மோசடி
நுகர்வோர் தேங்காய் எண்ணெய் கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் எச்சரித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யில் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த விடயம் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியது.
இதற்கமைய 25 மாவட்டங்களிலும் சந்தைகளில் இருந்து எழுமாறாக 75 எண்ணெய் மாதிரிகளை பெற்றுக்கொண்டு அவற்றை ஆய்வு செய்தோம்.
இவற்றில் 70 மாதிரிகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 20 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.