குற்றத்தை ஒப்புக்கொண்ட அரச அதிகாரி

குற்றத்தை ஒப்புக்கொண்ட அரச அதிகாரி

பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், மின்னியல் விசா வழங்கும் முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை தாம் நடைமுறைப்படுத்தவில்லை என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நீதியரசர் யசந்த கோட்டகொடவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

நீதிமன்றத்திடம் உத்தரவு குறித்து மேலும் விளக்கம் பெறவும், அத்தகைய விளக்கம் கிடைக்கும் வரை நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் சட்டமா அதிபர் தனக்கு அறிவுறுத்தியதாகவும் இலுக்பிட்டிய நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அரச அதிகாரி | Government Official Who Confessed To The Crime

இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மின்னியல் விசா வழங்குவதற்கான அமைச்சரவை முடிவை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் இலுக்பிட்டிய தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இலுக்பிட்டிய தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

இதன்போது நீதியரசர் கோட்டகொட, அவரிடம், உயர் அதிகாரத்தில் உள்ள யாராவது அவருக்கு அழுத்தம் கொடுத்தாரா என்றும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த இலுக்பிட்டிய குணதிலகாவால் வழங்கப்பட்ட எழுத்து பூர்வ மற்றும் வாய்மொழி அறிவுறுத்தல்களின்படி தாம் செயல்பட்டதாகக் கூறினார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அரச அதிகாரி | Government Official Who Confessed To The Crime

இந்தநிலையில், இலுக்பிட்டியவின் சட்டத்தரணியான சாலிய பீரிஸ், தனது கட்சிக்காரர் தவறான நேரத்தில் தவறான பதவியை வகித்ததால் இந்த சிக்கலில் சிக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, நீதியரசர்களான யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதற்காக வழக்கை ஜூலை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.