
கொழும்பில் உயிரை மாய்த்த பாசாலை மாணவி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமையால் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு வடக்கு குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், உயிரிழந்த சிறுமியின் தாய், மூன்று பாடசாலை மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
விசாரணைக்குத் தேவையான பாடசாலையின் சிசிடிவி கமராக்களின் டி.வி.ஆர் இயந்திரம், மற்றொரு விசாரணைக்காக பொது நிர்வாக அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதனால் ஏற்பட்ட தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதவான், உடனடியாக இயந்திரத்தைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதன் பின்னர் முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.