
நாட்டில் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு...! இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
2025ஆம் ஆண்டின் இரண்டாம் மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (11) அறிவித்தல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு குறித்து பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துகள் மீதான மறு ஆய்வு செயல்முறை தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அந்த ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவுப் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் நேற்று (10) தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘‘2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த முன்மொழிவு, அதாவது, 18.3சதவீத அதிகரிப்புக்கான முன்மொழிவு தொடர்பாக பொது ஆலோசனை செயல்முறை நடந்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை முடிவடைந்த பொதுக்கருத்துக் காலத்தில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் கருத்துக்களைச் சேகரித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொது முன்மொழிவுகள், இலங்கை மின்சார சபையின் (CEB) சமர்ப்பிப்பு மற்றும் மின்சார உற்பத்தி செலவுகள் குறித்த அறிக்கைகளை மதிப்பிட்ட பிறகு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது பரிந்துரையை வழங்குமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.