
தென்னிலங்கையில் ஹோட்டலில் கொடூரமாக தாக்கப்பட்ட குடும்பம் - பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
காலி கோட்டையிலுள்ள ஒரு உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி பொலிஸாரின் தகவலுக்கமைய, உணவு தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் இரவு 11:30 மணியளவில் மோதலாக மாறியது.
இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதால் ஆறு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் கொழும்பை சேர்ந்த 28 வயது இளைஞர், 17 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் அடங்குவதாகவும் காயமடைந்த ஏனைய 3 பேரும் உணவக ஊழியர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், மோதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உணவகத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருகின்றன.