
சம்பூரில் அமைக்கப்படவுள்ள இந்திய காற்றாலை மின்சார திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவின் (India) என்டிபிசி என்ற தேசிய வெப்ப மின்சாரக் கூட்டுத்தாபனத்தால் முன்னெடுக்க முன்மொழியப்பட்ட 135 மெகாவோட் சம்பூர் சூரிய மின் நிலைய மின்சார உற்பத்தி தொடர்பில் இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவுள்ளது.
இதன்படி, இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பிற்கு விற்கப்படும் ஒவ்வொரு கிலோவோட் மணி நேர மின்சாரத்திற்கும் இலங்கை மின்சார சபையால் செலுத்த வேண்டிய 5.97 அமெரிக்க சதம் என்ற புதிய பேச்சுவார்த்தை கட்டணத்துக்கே, எரிசக்தி அமைச்சகம் அடுத்த வாரம் அமைச்சரவை ஒப்புதலைப் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஒரு கிலோவோட் மணிக்கு சுமார் 7 அமெரிக்க சதங்கள் என்ற அளவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், இப்போது அது 5.97 அமெரிக்க சதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் உதயங்க ஹேமபால கூறியுள்ளார்.
இதேவேளை மன்னார் மற்றும் பூநகரியில் அமைக்கப்படவுள்ள இந்திய அதானி திட்டங்களுக்கும், இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தில் திருத்தங்களை கோரி வருகிறது.
முன்னதாக பூநகரி மற்றும் மன்னாரில் உள்ள அதானி காற்றாலை மின்சார நிலையங்களுக்கு ஒரு கிலோவோட் அலகுக்கு 8.26 அமெரிக்க சதக் கட்டணத்தை 2024 மே மாதத்தில் அப்போதைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
எனினும் அந்த முடிவை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்வதாக கடந்த மாதம் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் அதானி திட்டங்களுக்கும் ஒரு கிலோவாட் மணி நேர மின்சாரத்துக்கு 5 அமெரிக்க சதங்கள் என்ற வீதத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.