"யாழ்.மாவட்ட வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்"

"யாழ்.மாவட்ட வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்"

தேர்தல் தினத்தன்று யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் யாழ்.தேர்தல்கள் அலுவலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது

யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தால் இன்றையதினம் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கச் செல்லும் போது கீழுள்ள சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனாவிலிருந்தான முழுமையான பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

1.வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது மூக்கிலிருந்து நாடி வரையான பகுதியை மறைக்கும்படியான முறையில் முகக்கவசம் அணிந்து செல்லுதல் வேண்டும். முகக்கவசம் அணியாத எந்த வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

2.வாக்களிப்பு நிலையத்திற்கு வந்தவுடன் வாக்களிப்பு நிலையத்தின் நுழைவாயிலில் கை கழுவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் சவர்க்காரமிட்டு குறைந்தது 20 செக்கன்களுக்கு முறையாகக் கைகளைக் கழுவுதல் வேண்டும்.

3.வாக்களிப்பு நிலையத்திற்குள் உட்பிரவேசித்ததிலிருந்து குறைந்தது 1 மீற்றர் சமூக இடைவெளியை எப்பொழுதும் பேணிக் கொள்ளுதல் வேண்டும்.

4.வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும்போது ஆள் அடையாள ஆவணம், வாக்காளர் அட்டை, புள்ளடி இடுவதற்காக நீலம் அல்லது கறுப்பு நிறத்திலான பேனா (Pen) என்பனவற்றை மட்டுமே கொண்டுவருதல் வேண்டும்

கொரோனா (Covid 19) அறிகுறிகளான காய்ச்சல், இருமல் தொண்டைவலி, மற்றும் சுவாச இடர்பாடுகள் என்பன தென்படுபவர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு மாலை 4.00 தொடக்கம் 5.00 மணி வரையான காலப்பகுதிக்குள் முகக்கவசத்துடன் வருகை தந்து வாக்களிப்பது சிறப்பானதாகும்.

வாக்குரிமையை பாதுகாப்போம், பாதுகாப்பாக வாக்களிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.