மோட்டார் சைக்கிள் மாடுடன் மோதி விபத்து: இரு இளைஞர்கள் படுகாயம்
திருகோணமலையில் மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, நேற்றையதினம் (03.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மொரவெவ பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியால் வந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனையடுத்து, படுகாயம் அடைந்த இரு இளைஞர்களும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகாயம் அடைந்த இளைஞர்கள் மஹதிவுல்வெவ முதலாம் கண்டத்தில் வசித்து வரும் 30 மற்றும் 35 வயது உடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், மொரவெவ பிரதேச வீதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் நிற்பதினால் இவ்விபத்து இடம்பெற்று வருவதாகவும் பிரதேச சபையினர் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.