யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக போர்க்கொடி

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக போர்க்கொடி

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தமது மாவட்டத்துக்கு வைத்தியர்களை விடுவிக்காவிடின் தொழில்சங்க போராட்டம் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை தொடர்பான நெருக்கடி நிலமைகள் தொடர்பில் அரச மருத்துவஅதிகாரிகள் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கிளையினர் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

இந்த ஊடக சந்திப்பின் போது மாவட்ட அரச மருத்துவஅதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் சிவனேசன் பிரபாகரன்,செயலாளர் புத்திக்க மணிக்கே ஆகியோர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு 60 வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில் 27 வைத்தியர்கள்தான் அனைத்து பிரிவிலும் கடமையில் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் பொது மருத்துவ பிரிவில் ஒரு மருத்துவரே இரண்டு மருத்துவ விடுதி,இரண்டு மருத்துவ சிகிச்சை கிளினிக்,அவசர சிகிச்சைப்பிரிவு, மற்றும் கொரோனா தொற்று என்று சந்தேகிக்கப்பட்ட நோயாளர்களை கவனிக்கும் இடைநிலைப்பிரிவு ஆகியவற்றுக்கான சேவைகளை செய்து வருகின்றார்.

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் மருத்துவ சேவைப்பணிப்பாளருடன் கலந்துரையாடியபோது 20.09.2019 ஆம் ஆண்டு யாழ்போதன வைத்தியசாலை பணிப்பாளருக்கு குறைந்தது நான்கு உள்ளக பயிற்சி நிறைவு செய்து நியமனத்திற்காக காத்திருக்கும் வைத்தியர்களை மாற்று தீர்விற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு விடுவிக்குமாறு அறிவிக்கப்பட்டு இன்றுவரை இந்த மருத்துவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இதுவிடையம் குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கம் இடையில் நடைபெற்ற பேச்சின் போது இந்த பிரச்சனைக்கு நிதந்தர தீர்வாக முடிவுகள் எடுக்கப்பட்டும் அவை நிறைவேற்றப்படவில்லை.

நான்கு உள்ளக பயிற்சி நிறைவு பெற்ற நியமனத்திற்காக காத்திருக்கும் வைத்தியர்களை யாழ்போதனா வைத்தியசாலையில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு விடுவிக்கும் வரை 21.07.2020 அன்று தொடக்கம் மருத்துவமனையின் அனைத்து பொது மருத்துவ சேவையினை நிறுத்தி தொழில் சங்க போராட்டத்தினை மேற்கொண்டோம்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மருத்துவ சேவைகள் பணிப்பாளரால் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு இறுதியாக உள்ளக பயிற்சி நிறைவு செய்த வைத்திய அணியில் இருந்து தகுதி பட்டியலில் கீழ் வரிசையில் உள்ள நான்கு வைத்தியர்களை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விடுவிக்குமாறு தெளிவாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று வரை இந்த நான்கு வைத்தியர்களும் இன்னும் விடுவிக்கப்படவில்லை யாழ் வைத்தியசாலையில் தற்போது மூன்றிற்கு மேற்பட்ட வைத்திய அணிகள் உள்ளக பயிற்சியினை நிறைவு செய்துவிட்டு வைத்திய நியமனத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

மருத்துவ பணிப்பாளரால் குறிப்பிட்ட நான்கு வைத்தியர்களையாவது அவரின் வேண்டுகோளின் பின்னர் கூட யாழ். போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் அவர்களை விடுவிக்காமல் இருப்பது நியாயமற்ற செயல்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வலி நன்கு அறிந்து அவர்களின் தோளுக்கு தோள் நின்று உதவிய ஒருவரின் இந்த அசமந்த போக்கு வேதனையளிக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் தடையின்றிய சிறந்த சேவைக்காக நான்கு வைத்தியர்களும் நிரந்தரமாக விடுவிக்கப்படும் வரை தொழில்சங்க போராட்டம் தொடரும்.

தாய்ச்சங்கத்தின் ஒப்புதலுடன் முழுமையான வேலை நிறுத்த போராட்டத்திற்கு செல்லவேண்டி ஏற்படும் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையினை அனைவரும் ஒன்றினைந்து சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.