எட்கா தொழில்நுட்ப ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!

எட்கா தொழில்நுட்ப ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!

இந்தியாவும் இலங்கையும் இந்த வருடத்தினுள் தமது எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பாதையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடயமறிந்த தகவல் தரப்புக்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

2000 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட முந்தைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு அண்டை நாடுகளுக்கு இடையே இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதை இந்த எட்கா ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எட்கா பற்றிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகின.

இது பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை அண்மையில் முடிவடைந்துள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தம் இந்த வருடத்தில் முடிவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மேலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.