வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாகப் பயன்படுத்துகின்றனர்.

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் | Paddy Left To Dry On The Street Can Cause Cancerஇதனால் பாரிய அளவில் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. பலர் வீதி விபத்துக்களில் சிக்கி பரிதாபமான முறையில் உயிரிழக்கின்றனர். இவ்வாறு வீதியில் நெல் உலரவிடுவதனால் வீதி விபத்தையும் தாண்டி பாரிய ஆபத்தொன்று காணப்படுகின்றது.

வாகன டயர்கள் வீதியில் உராய்வதனால் 'கற்ட்மியம்' எனும் மூலகம் வீதியில் படிந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான வீதியிலேயே விவசாயிகள் நெல்லினை உலரவைக்கின்றனர்.

இவ்வாறு நெல்லினை உலரவிடும்போது குறித்த 'கற்மியம்' எனும் மூலகம் நெல்லோடு கலந்துவிடுகின்றது. இவ்வாறு இந்த 'கற்மியம்' எனும் மூலகம் கலந்த நெல் அரிசியை தொடர்ந்து பத்துத் தொடக்கம் பதினைந்து வருடங்கள் உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வய்ப்பிருக்கின்றது.

எனவே, வீதியில் நெல் உலரவிடுவதை விவசாயிகள் தவிர்ப்பதே சிறந்தது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.