அதிகரிக்கப்படவுள்ள கொடுப்பனவுகள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி 5,000 ரூபாவாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவு ரூபா 7,500 ஆகவும், 2,000 ரூபாவாக இருந்த முதியோர் கொடுப்பனவு 3,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்போது நிவாரணம் பெற்று வரும் குடும்பங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அவர்களுக்கும் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும்.
இதற்கிடையில், மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைய திட்டமிடப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவுகளின் கீழ் ஆபத்தில் உள்ள மற்றும் இடைநிலை பிரிவின் கொடுப்பனவுகள் டிசம்பர் 31 வரை செய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது இடைநிலைப் பிரிவினருக்கு 2500 ரூபாவும், பாதிப்புக்குள்ளான பிரிவினருக்கு 5000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.