வவுனியா - திருகோணமலை வீதியில் முதியவர் சடலமாக மீட்பு
வவுனியா - திருகோணமலை பிரதான வீதியின் ஹெப்பற்றிப்கொல்லாவ பகுதியில் முதியவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சடலமானது இன்று (20.01.2024) ஹெப்பற்றிப்கொல்லாவ பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா - திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தினால் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் இதுவரை விபத்தை ஏற்படுத்தியவர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற வில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த நபர் வவுனியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெப்பற்றிப்கொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.