2023 இல் 21,953 வீதி விபத்துக்கள் ; 2,163 பேர் பலி.
நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்கள் தொடர்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவிக்கையில்,
இந்த விபத்துக்களில் 5,206 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ ஊனமுற்றார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
நேற்று வியாழக்கிழமை (21) நடைபெற்ற இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி பாதுகாப்பு நிபுணர் குழுவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், இதற்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.