யாழ்ப்பாணத்தில் மனதை நெருட வைத்த சம்பவம் - யாரை நோவது....!
நடக்கும் நிகழ்வுகளை பார்க்கிறபோது யாரைச்சொல்லி நாம் யாரை நோவது..
அதிகாரிகளும் திணைக்களங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யமுடியாத நிலையில் இருப்பதால் ஒரு குழந்தை இறந்தும் நிம்மதியற்று, அக்குழந்தையின் சடலத்தை நாயிழுத்து வந்து நடுவீதியில் போட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியில் குழந்தை ஒன்றின் சிதைவடைந்த உடற்பாகம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாம்.
பிரதேச வாசிகள் இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்க அங்கு வந்த காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறது.

இப்படியிருக்க, இது குறித்து அறிய வருவதாவது யாழ். போதனா வைத்தியசாலையில் இறந்த குழந்தை ஒன்றின் உடலை வைத்தியசாலை நிர்வாகம் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்க மாநகரசபை அந்த உடலை அடக்கம் செய்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் மயானப் பகுதியில் யாழ். மாநகர சபையால் பொறுப்பேற்கப்பட்டு புதைக்கப்பட்ட சடலம் இவ்வாறு விலங்குகளால் இழுத்துவரப்பட்டு பொதுவெளியில் போடப்பட்டிருப்பதாக பிரதேச வாசிகளும் தெரிவிக்கின்றனர்.

இறந்த ஒருவரின் உடலை எந்த அளவு ஆழத்தில் புதைக்கவேண்டும் என்று அறியாத மாநகர சபை ஊழியர்களின் அசமந்த போக்கையும் அக்கறையீனத்தையும் நோவதா?
அல்லது ஒரு விடயத்தை செய்யக்கூடியவர்களை இனங்கண்டு அதனை அவர்களிடம் வழங்க முனையாத அதிகாரிகளினை நோவதா?
இல்லாவிட்டால் இந்த மாநகரசபையிடம் இதனை ஒப்படைத்த வைத்தியசாலை நிர்வாகத்தை நோவதா?
உங்கள் வீட்டு குழந்தையாய் இருந்தால் இப்படி நாய் தோண்டி இழுத்துவரும் அளவிற்கா புதைத்திருப்பீர்கள்!