யாழில் மாணவிகளை காணொளி எடுத்த ஆசிரியர் - போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக நேற்று(11) மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்று கூடிய உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரிவித்தே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த திங்கட்கிழமை உயர்தர மாணவர்களின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக பெற்றோருக்கான கலந்துரையாடல் இடம்பெற்றபோது கலந்துரையாடலுக்கு வராத பெற்றோர்களின் மாணவர்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைத்தார்.
இதன்போது பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் சாதாரணமாக உரையாடுவது போன்று உரையாடி அதனை ரகசியமாக தனது தொலைபேசியில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பாடசாலைக்கும், மாணவிகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்திய ஆசிரியரை இடமாற்றுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெல்லிப்பழை கோட்டக் கல்வி பணிப்பாளர் வேலாயுதர் அரசகேசரி மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவரிடம் மாணவர்களினால் கோரிக்கை கடிதமும் வழங்கப்பட்டது.
இதனை வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

