யாழ் தனியார் விடுதியில் கலாசார சீரழிவு - மூவர் கைது..!

யாழ் தனியார் விடுதியில் கலாசார சீரழிவு - மூவர் கைது..!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவரை கைது செய்துள்ளனர்.

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாசார சீரழிவுகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண காவல்துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன் போது , உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் காவல்துறை நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை அப்பகுதி மக்களால் காவல்துறை மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் , அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு காவல்துறை பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.