யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே கைகலப்பு: சிங்கள மாணவர் படுகாயம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே கைகலப்பு: சிங்கள மாணவர் படுகாயம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தாக மாறியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட சிங்கள மாணவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

அதனை அவதானித்த சிங்கள மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது.

விஞ்ஞான பீட இறுதி ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.