உலகிலேயே உயரமானது- பிரேசிலில் 141 அடி உயர இயேசு சிலை அமைப்பு

உலகிலேயே உயரமானது- பிரேசிலில் 141 அடி உயர இயேசு சிலை அமைப்பு

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது.

தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் 125 அடி உயர இயேசு சிலை அங்குள்ள கொர்கொவாடோ மலை மீது அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டு சின்னமாக கருதப்படுகிறது.
 
ரியோவில் உள்ள இயேசு சிலை 1922ம் ஆண்டில் இருந்து 1931ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாகும். சிலையை காண ஆண்டுதோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் ரியோவில் உள்ள இயேசு சிலையைவிட உயரமான சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது.

கிறிஸ்ட் தி ப்ரொடெக்டர் (கிறிஸ்து பாதுகாவலர்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயேசு சிலையின் உயரம் 141 அடியாகும். அங்குள்ள மலை மீது அமைந்துள்ள சிலை உலோக கட்டமைப்பின் மீது கான்கிரீட் மூலம் கட்டப்பட்டுள்ளது.

சிலையின் நெஞ்சு பகுதியில் இதய வடிவ ஜன்னல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து நகரை பார்க்க முடியும்.

இதுகுறித்து சிலைக்கு நிதியுதவி செய்த சங்கத்தின் துணை தலைவர் ராபிசன் சோன்சாட்டி கூறும்போது, இது உலகின் மிகப்பெரிய கிறிஸ்து சிலை. என்காண்ட்டோ நகரில் உள்ள மோரோதாஸ் ஆண்டனாஸ் மலையில் அமைக்கப்பட்டு இச்சிலை அடுத்த ஆண்டே பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றார்.