கேட்ச்களை தவறவிட்டதால் தோற்றோம்- சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா பாய்ச்சல்

கேட்ச்களை தவறவிட்டதால் தோற்றோம்- சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா பாய்ச்சல்

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச்சுகளை தவற விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டியில் லக்னோவிடம் வீழ்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது.

 

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாசை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் ஆடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப் புக்கு 210 ரன் குவித்தது.

 

 

உத்தப்பா 27 பந்தில் 50 ரன்னும் ( 8 பவுண்டரி , 1 சிக்சர் ), ஷிவம் துபே 30 பந்தில் 49 ரன்னும் (5 பவுண்டரி , 2 சிக்சர் ), மொய்ன் அலி 22 பந்தில் 35 ரன்னும் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அவேஸ்கான், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

 

பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் 211 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

குயின்டன் டி காக் 45 பந்தில் 61 ரன்னும் (9 பவுண்டரி), இவின் லீவிஸ் 23 பந்தில் 55 ரன்னும் ( 6 பவுண்டரி , 3 சிக்சர் ), கேப்டன் லோகேஷ் ராகுல் 26 பந்தில் 40 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர் ) எடுத்தனர். பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டும் , பிராவோ , தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

 

சென்னை அணி தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்று இருந்தது.

 

நேற்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே. வீரர்களின் பீல்டிங் மோசமாக இருந்தது. பல கேட்ச்சுகளை தவற விட்டனர். குயிண்டன் டி காக் கேட்சை மொய்ன்அலி தவற விட்டார்.

 

கேட்ச்சுகளை தவற விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

 

ராபின் உத்தப்பாவும், ஷிவம்துபேயும் பிரமாதமாக விளையாடினார்கள். எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பீல்டிங்கில் கேட்ச்சுகளை தவற விட்டோம். கேட்ச் பிடித்தால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

 

நாங்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். கேட்ச்சுகளை தவற விட்டது. பனி துளி போன்ற காரணங்களால் தோல்வி ஏற்பட்டது.

 

எங்கள் அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. முதல் 6 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. பந்து வீச்சாளர்கள் திட்டத்தை செயல்படுத்துவது அவசியமாகும்.

 

இவ்வாறு ஜடேஜா கூறினார்.

 

சென்னை அணி 3-வது ஆட்டத்தில் பஞ்சாப்கிங்சை ஏப்ரல் 3-ந்தேதி எதிர் கொள்கிறது லக்னோ அணி முதல் வெற்றியை பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்று இருந்தது. லக்னோ 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4-ந்தேதி சந்திக்கிறது.