கொழும்பு - கண்டி வீதி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் - கேகாலை மாவட்ட செயலாளர்

கொழும்பு - கண்டி வீதி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் - கேகாலை மாவட்ட செயலாளர்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதி மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனக் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகக் கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்பட்டது.

இதன் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடான போக்குவரத்து கீழ் கடுகண்ணாவ (வழித்தட இல. 01) பகுதியுடன் இடை நிறுத்தப்பட்ட நிலையில், அவ்வீதியை மீளத் திறப்பது தொடர்பில் இன்று (15) தீர்மானம் எடுக்கப்படவிருந்தது.

அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இன்று (15) காலை கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், கேகாலை மாவட்ட செயலாளர் மற்றும் மாகாண ஆளுநருடனும் கலந்துரையாடினர்.

அதன்போது, இன்று (15) பெறப்பட்ட மேலதிக அவதானிப்புகள் மற்றும் தகவல்களை கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் அமைச்சு மட்டத்திலும் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு  இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, காலநிலை வழமைக்கு திரும்பியதன் பின்னர் ஒரு வழி போக்குவரத்துக்காக குறித்த பாதை மீளத் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.